மகா பெரியவரின் 132வது ஜெயந்தி விழா வேத பாராயணத்துடன் பக்தி பரவசம்
சென்னை: மகா பெரியவரின் 132வது ஜெயந்தி விழா, மயிலாப்பூரில் நேற்று, வெகு விமரிசையாக நடந்தது.
காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது பீடாதிபதியும், பக்தர்களால் ‘மகா பெரியவா’ என அன்புடன் போற்றப்படுபவருமான, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது ஜெயந்தி விழா, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை மற்றும் ஆரத்தியுடன், இவ்விழா தொடங்கியது. தொடர்ந்து, காசி ராமமூர்த்தி வாத்தியார் தலைமையில், வேத பாடகர் குழுவினர், யஜூர் வேத பாராயணம் செய்தனர்.
தொடர்ந்து, ‘மகா பெரியவாளும் குருகுஹனும்’ என்ற தலைப்பில், விஜயலட்சுமி சொற்பொழிவாற்றினார். மகா பெரியவரின் ஆன்மிக சிந்தனைகள், வேத தர்ம பாதுகாப்பிற்காக, அவர் ஆற்றிய அரும்பணிகள், சமுதாயத்திற்கு வழங்கிய வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவை குறித்து, விரிவாக அவர் எடுத்துரைத்தார். ஜெயந்தி விழா நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விழாவில், பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, வேதபாட நிதி அறக்கட்டளை நிர்வாகி சரபேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். வேதபாட நிதி அறக் கட்டளை மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து, இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.