இமயமலையில் நம்ம ஊர் முருகன் கோவில் தரிசிக்க வருமாறு உத்தரகண்ட் அரசு அழைப்பு
இமயமலை தொடரில் உள்ள கிரவுஞ்ச மலையில் உள்ள நம்ம ஊர் முருகனான கார்த்திக் சுவாமியை தரிசிக்க வருமாறு, முருக பக்தர்களுக்கு, உத்தரகண்ட் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இமயமலை தொடரில், உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கிரவுஞ்ச மலை உள்ளது. மொத்தம், 12,000 அடி உயரமுள்ள மலையின் உச்சியில், கார்த்திக் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கந்த புராண கதைகளின்படி, கைலாயத்தில் விநாயகர், முருகன் ஆகியோரில், யாருக்கு முதல் வழிபாடு என்ற போட்டி நடந்தது. உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ, அவர்களுக்கு முதல் வழிபாடு என, சிவபெருமான் கூற, முருகன் உடனே தன் மயில் வாகனத்தில் ஏறி உலகை சுற்றி வர புறப்பட்டார். விநாயக பெருமான், ‘தாய், தந்தையான சிவன், பார்வதி தான் உலகம். அவர்களை சுற்றி வந்தாலே உலகை சுற்றியதற்கு சமம்’ என, இருவரையும் சுற்றி முதல் வழிபாட்டு உரிமையை பெற்றார்.
முதல் வழிபாட்டு உரிமை விநாயகருக்கு கிடைத்ததை கண்டு மனம் வருந்திய முருகன், கிரவுஞ்ச மலையில் எழுந்தருளினார். பின், யாகம் வளர்த்து, தன் உடம்பில் இருந்து சதையை பிய்த்து எடுத்து, யாகக் குண்டத்தில் ஆஹூதியாக வழங்கினார். அப்போது, சிவபெருமான் காட்சி தந்து முருகனுக்கு அருள்பாலித்தார் என்பது புராணக் கதை. சதையை ஆஹூதியாக வழங்கியதால் எலும்பு ரூபமாக முருகப்பெருமான் வேல், மயிலுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், சுயம்பு மூர்த்தியாக முருகன் காட்சியளிப்பதை இங்கு மட்டுமே காண முடிகிறது. இவ்வாறான சிறப்பு வாய்ந்த கார்த்திக் சுவாமி கோவில், ருத்ர பிரயாக் – போகாரி சாலையில், கணக்சவுரி கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருந்து, 3 கி.மீ., துாரம் கரடுமுரடான பாதையில் பயணித்து, கார்த்திக் சுவாமியை தரிசிக்கலாம்.
அங்கிருந்து பார்த்தால் கைலாய மலை தொடர்களான ஜானோன்லி, கங்கோத்ரி, பர்த்தே குண்டா, கேதார்நாத், சுமேரு பிரபாத், மந்தாகினி பர்வதம், சவுக்கம்பா – 4, சவுக்கம்பா – 3, பாலாகுன், நீல்கந்த் ஆகிய பனி படர்ந்த மலை சிகரங்களை தரிசிக்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திக் சுவாமி கோவிலுக்கு, உத்தரகண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ரவிசங்கர், அவிநாசி ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார், செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஆகியோருடன் இணைந்து சிறப்பு வழிபாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து, உத்தரகண்ட் மாநில சுற்றுலா மேம்பாட்டு வாரிய கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி ரவிசங்கர் கூறியதாவது: இமயமலையில் வீற்றிருக்கும் கார்த்திக் சுவாமிக்கான விழா, இந்தியாவின் வடக்கு – தெற்கு இடையே உள்ள ஆன்மிகத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தலங்களுக்கு வருவோர், ருத்ர பிரயாக்கில் உள்ள கார்த்திக் சுவாமியை தரிசித்து அருள் பெறலாம். மேலும், பிரமிப்பான இமயமலை தொடர்களையும் ரசிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். – நமது நிருபர் –: