அரசு பதவிக்கு அருள் தரும் காமாக்யா தேவி; அசாமிற்கு படையெடுக்கும் அரசியல் புள்ளிகள்
சென்னை: அசாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோவிலுக்கு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹாத்தியின் மேற்குப் பகுதியில் உள்ள, நீலாச்சல் மலையில், காமாக்யா தேவி கோவில் அமைந்துள்ளது.
51 சக்தி பீடங்கள்; இது, 51 சக்தி பீடங்களில் பழமையானதாகவும், புனிதமானதாகவும் போற்றப்படுகிறது. தாந்திரீக சக்தி வழிபாட்டின் மையப்புள்ளியாகவும் இக்கோவில் உள்ளது. வடகிழக்கு மாநில மக்கள் மட்டுமின்றி, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் காமாக்யா தேவி கோவிலுக்கு சென்று வழிபடுவது, நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது.
இப்போது, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும், குறிப்பாக அரசியல் தலைவர்களும், காமாக்யா தேவி கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள சிவகுமார், காமாக்யா தேவியின் தீவிர பக்தர். மாதம் ஒருமுறை குவஹாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. சிவகுமாரின் அரசியல் ஏற்றங்களுக்கு, குறிப்பாக முதல்வர் பதவி கிடைத்ததற்கு காமாக்யா தேவியின் அருளே காரணம் என, அவர் நம்புவதாக கூறப்படுகிறது. இதனால், கர்நாடக அரசியல்வாதிகள் பலரும் காமாக்யா தேவி கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அண்ணாமலை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையும், காமாக்யா தேவி கோவிலில் வழிபட்ட பின்பே, முக்கிய முடிவுகளை எடுப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன், அசாம் சென்று, குவஹாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலில் வழிபட்ட பிறகே, அவர் டில்லி சென்றார். தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., - அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் பலரும், காமாக்யா தேவி கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, குடும்பத்துடன் காமாக்யா தேவி கோவிலில் வழிபட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள காமாக்யா தேவி கோவிலுக்கு, தென்மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் செல்வது, பேசுபொருளாகி வருகிறது.
செல்வது எப்படி?;அசாம் தலைநகர் குவஹாத்திக்கு விமானம் அல்லது ரயிலில் செல்லலாம். குவஹாத்தி விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவிலும், ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவிலும் காமாக்யா தேவி கோவில் அமைந்துள்ளது. காமாக்யா தேவி கோவிலில் தரிசனம் செய்ய, இணையதளத்தில் இலவச தரிசனம் அல்லது சிறப்பு தரிசனத்திற்கு, ஏதேனும் ஒரு அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். தற்போது, காமாக்யா தேவியை மூன்று மணி நேரம் வரை காத்திருந்து, தரிசனம் செய்யும் நிலை இருப்பதாக, அங்கு சென்று வந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.