நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் கடம்ப பூ பக்தர்கள் பரவசம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். இங்கு முருகனுக்கும்,பெருமாளுக்கும் கடம்ப பூவால் அர்ச்சனை செய்வது சிறப்பாகும்.
இதனால், இக்கோவிலில் கடம்ப மரம் வளர்த்து வருகின்றனர். இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டுமே பூக்கள் பூக்கும். ஆனால் பருவகால மாற்றத்தால் முன் கூட்டியே வைகாசி மாதத்தில் கடம்ப பூ பூத்தது. இந்த பூவின் நறுமணத்தை முகர்ந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்கோவிலில் நேற்று கடம்ப மரத்தில் பூக்கள் பூத்து ரம்மியமாக காட்சியளித்தன. வித்தியாசமான அழகுடன் காணப்படும் இந்த பூவை பார்க்கவும், இதன் நறுமணத்தை நுகரவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.