ஹிந்து மதத்தை மட்டும் ஒடுக்குவதா, மதசார்பின்மை? வி.எச்.பி., தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி கேள்வி
வேலுார்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி அறிக்கை:
தமிழகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில் ஹிந்துக்களுக்கு விரோதமாக, சனாதனத்திற்கு எதிராக சம்பவங்கள் நடந்தன. நாலாயிரம் கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தியதாக தி.மு.க., அரசு தம்பட்டம் அடித்தபோதிலும், திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற விடவில்லை. பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்ட திராவிட கட்சிகளை மக்களே வீழ்த்தி, த.வெ.க.,விற்கு வாய்ப்பு அளித்தனர்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், ‘மதம், ஜாதி அடையாளத்துடன் கல்வி வளாகத்துக்குள் யாரும் வரக்கூடாது. மூடநம்பிக்கைக்கு, அறிவியலுக்குப் புறம்பான காரியங்களுக்கு இடம் இல்லை. தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூக நீதி போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் மதத்தைப் பின்பற்றவும், அதன் சின்னங்களை அணியவும் முழு சுதந்திரம் தந்துள்ளது. நெற்றியில் விபூதி, குங்குமம் அணிவது, கைகளில் காப்பு கட்டுவது ஹிந்துக்களின் அடையாளங்கள். ஆனால். த.வெ.க., அரசின் அமைச்சர் ‘மத அடையாளம் கூடாது’ என்று மறைமுகமாக ஹிந்து மாணவர்களை எச்சரிக்கிறார்.
‘மதச்சார்பின்மை’ என்பது ஒரு மதத்தை மட்டும் ஒடுக்குவதல்ல; அனைத்து மதங்களையும் ஒன்றாக நடத்துவதே. இது அனைவருக்குமான, மதச்சார்பற்ற அரசு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், மத அடையாளங்களோடு வரக்கூடாது என்று பிற மதங்களைச் சேர்ந்தவர்களிடம் சொல்லும் தைரியம் இந்த அரசுக்கும், அமைச்சருக்கும் இருக்கிறதா?
த.வெ.க., கூட்டணி ஆட்சியின் அமைச்சர் வன்னிஅரசு, சபாநாயகர் பிரபாகர் ஆகியோர் சென்னையில் சமீபத்தில் நடந்த கிறிஸ்தவ மத போதகர்களின் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய வன்னி அரசு, ‘இனி கிறிஸ்தவர்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும். பைபிளில் இருப்பதுதான் அரசியலமைப்பு சட்டத்திலும் இருக்கிறது,’ என பேசியுள்ளார்.
மறுபக்கம் இந்த அரசின் அமைச்சர்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும், தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், தி.மு.க., அரசு எடுத்த அதே கொள்கையையே த.வெ.க., அரசும் பின்பற்றும் கூறிவருகிறது. பிற மதத்தவர்களின் ஓட்டுகளை பெற தொடர்ந்து ஹிந்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
மாணவர்கள் மனதில் நன்னெறி பகவத் கீதை, சுவாமி விவேகானந்தர் போன்றோரின் அறிவுரைகளையும் போதிக்க வேண்டும். ஆனால் தி.மு.க., வழிவந்த த.வெ.க., அரசு, அதற்கும் மதச்சாயம் பூசுகிறது.
‘பகுத்தறிவை கற்றுக்கொடுப்போம்’ என்று தி.மு.க.,வின் பாணியிலேயே இவர்களும் இயங்குகிறார்கள். தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் ‘தி.மு.க ., –2.0’ அரசாக இது, தொடர்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஓட்டு வாங்குவதற்காக தி.மு.க., வழியில் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டால், அவர்களுக்கு நேர்ந்த கதியே த.வெ.க., வுக்கும் ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.