உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் தேர் திருவிழா

வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் தேர் திருவிழா

 வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா அமைச்சர் வடம் பிடித்து துவக்கிவைத்தார்.


வில்லியனுாரில் பிரசித்திபெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 22-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்தது. வரும் 3ம் தேதி வரையில் நடைபெறும் பிரமோற்சவத்தில் கடந்த 25ம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும், 26ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 7:00 மணியளவில் மிதுன லக்கினத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தேர் வடம் பிடித்து துவக்கிவைத்தார்.விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார் மற்றும் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், பா.ஜ., நிர்வாகிகள் மோகன்குமார், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தேர் வில்லியனுார் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று காலை 9:20 மணியளவில் மீண்டும் தன் நிலையை வந்தடைந்தது. நாளை (1ம் தேதி) மாலை புஷ்ப பல்லக்கு வீதியுலா, 2ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவம் மற்றும் 3ம் தேதி மாலை விடையாற்றி உள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் தலைமையில் உற்சவதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !