திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
திருத்தணி: வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளான நேற்று, திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால், இரண்டு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் திரண்டனர். திருத்தணி மலைக்கோவிலில், 12 திருமணங்களும், திருத்தணி நகரில் உள்ள தனியார் மண்டபங்களில் 63 திருமணங்களும் என, மொத்தம் 75 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என, மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். இதனால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். நேற்று, இருசக்கர வாகனங்கள், குறிப்பிட்ட கார்கள் மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன. முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.