இந்தோனேசியாவில் 1000 ஆண்டுகள் பழமையான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் 1000 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் வழிபாடு செய்தார்.
இந்தோனேசியாவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராம்பனன் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் பிரதமர் மோடி சென்றார். இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இருநாட்டு உறவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவிடம் இருந்த பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் அஸ்ட்ரா வான்வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இன்று பிரதமர் மோடி இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இணைந்து, யோக்யகர்த்தாவில் உள்ள புகழ்பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு வருகை தந்தார். இந்த வருகையானது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவையும் இந்தோனேசியாவையும் இணைத்து வரும் ஆழமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பறைசாற்றுகிறது.
மிகப்பெரிய இந்து கோயில்; 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பனன், இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோயில் வளாகமாகவும், தென்கிழக்கு ஆசியாவின் மிகச்சிறந்த கட்டடக்கலைப் படைப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிறது; இது இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் நீடித்த நட்பின் காலத்தால் அழியாத அடையாளமாக விளங்குகிறது. பிரம்பனன் கோயில் வளாகம் ஆரம்பத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 240 பெரிய மற்றும் சிறிய கோயில்களைக் கொண்டிருந்தது. தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் பரவியிருந்ததற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகத் திகழ்கிறது. பிரம்பனனில் உள்ள சிவபெருமானின் கோயிலின் நடைபாதைகளில் செதுக்கப்பட்டுள்ள ராமாயணக் கதைச் சிற்பங்கள், அந்த இதிகாசத்தின் மிகச்சிறந்த காட்சி வடிவ விவரிப்புகளில் உலகளவில் முக்கியமானவையாகும். இவை ஒவ்வொன்றாக, காலம், புவியியல் எல்லைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து நிற்கும் ஒரு கதையை விவரிக்கின்றன. யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலமான இது, 1998-இல் இந்தோனேசியாவின் தேசிய கலாச்சாரச் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில், பௌர்ணமி அன்று இரவு கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் ராமாயண நடன நாடகம் (பாலே) நிகழ்த்தப்படுகிறது.
பிரதமர் வழிபாடு; இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, புகழ்பெற்ற பிராம்பனன் கோவிலுக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் பிரதமர் மோடி சென்றார். இருவரும் ஹெலிகாப்டரில் செல்லும் போட்டோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கோவிலின் அழகிய கோபுர அமைப்புகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் மோடி ரசித்தார். கோவிலுக்குள் அந்நாட்டு அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் சென்ற பிரதமர் மோடி, சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். இந்த கோவிலின் பராமரிப்பு பணியில் இந்திய தொல்லியல் துறை இந்தோனேஷியாவுக்கு பேருதவி செய்துள்ளது குறிபிடத்தக்கது.