காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம்
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், அதிகாலை நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. இன்று ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, விஷ்வக்க்ஷேனர், புண்ணியாவசனம், கலச ஆவாஹனம் ஆகியவை நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு, பால், தயிர், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள், பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சிம்மாசனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை முடிந்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.