நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்
மேட்டுப்பாளையம்; பெள்ளாதி ஊராட்சியில் உள்ள அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட, சின்னதொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 11ம் ஆண்டு ஏகாதச ருத்ர ஹோம சகித திருக்கல்யாண வைபவம், கடந்த 9ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 10ம் தேதி மகா கணபதி ஹோமம், கலச அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. மாலையில் முகூர்த்தக் கால் நடப்பட்டது. 11ம் தேதி சின்னதொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தக் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். 12ம் தேதி மாலை விநாயகர் வழிபாடும், கோ பூஜையும், ருத்ர ஹோமமும், மஹா தீபாராதனை ஆகியவை நடந்தன.
இன்று காலை சேரன் நகர், சின்னதொட்டிபாளையம், நீலகிரி நெஸ்ட் ஆகிய ஊர்களில் இருந்து, பொதுமக்கள் சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்பு விநாயகர் பூஜையும், பவீத தாரணம், கன்னிகாதானம், திருமாங்கல்ய தாரணம், மஹா தீபாராதனை ஆகியவை நடந்தன. மதியம், ஒரு மணிக்கு அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு திருமாங்கல்யதாரண திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிவகிரியை சேர்ந்த கண்ணன் சிவாச்சாரியார் குழுவினர் திருக்கல்யாண வைபவம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமியின் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.