உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படுகர் கிராமங்களில் ‘ஹிரியோடைய்யா’ திருவிழா கோலாகலம்

படுகர் கிராமங்களில் ‘ஹிரியோடைய்யா’ திருவிழா கோலாகலம்

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில்,‘ஹிரியோடைய்யா’ திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.

படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ‘ஹிரியோடைய்யா’ திருவிழா இன்று நடந்தது. தொதநாடு சீமைக்கு உட்பட்ட, கடநாடு, கம்பட்டி, ஒன்னதலை, டி. மணியட்டி, கக்குச்சி பனஹட்டி மற்றும் எப்பநாடு கிராமங்களில் உள்ள ஹிரியோடைய்யா கோவில்களில் இருந்து, சற்று தொலைவில் அமைந்துள்ள வனக்கோவிலுக்கு (பனகுடி) பக்தர்கள் சங்கொலி எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடை திறக்கப்படும் இக்கோவிலில், மூங்கில் குச்சிகளை உரசி அதிலிருந்து வெளியேறிய தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. வனப்பகுதியில் இருந்து சேகரித்து வரப்பட்ட கொம்பு தேன், தும்பை, முதல் கன்று குட்டி ஈன்ற பசு மாட்டின் பால் ஆகியவற்றை கொண்டு அய்யனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பாரம்பரிய உடை அணிந்த பக்தர்கள், காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர். இந்த கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவர்கள் கோவிலின் வெளிப்புறத்தில் நின்று காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இதனை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்தபின், கோவில் நடை சாற்றப்பட்டு, பக்தர்கள் மீண்டும் சங்கொலி எழுப்பி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக திரும்பினர். இந்த விழாவால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் சமுதாய கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, நாளை (செவ்வாய்) ஹரிக்கட்டு என்ற தானிய திருவிழா நடக்கிறது. கோத்தகிரி பொரங்காடு சீமைக்குட்பட்ட தந்தநாடு தொட்டூர் கிராமத்தில், ‘மண்டைதண்டு’ திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !