உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி – சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை

திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி – சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை

சென்னை; ஆடி சுவாதியை முன்னிட்டு திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி – சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.


பூலோக கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் தியாகராஜசுவாமி – வடிவுடையம்மன் திருக்கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சைவ சமயத்தின் பெருமைமிகு நாயன்மார்களான சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கான குருபூஜை விழா இன்று பக்தி பரவசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மலர்கள், பட்டாடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான சிவபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள் பெற்றனர்.


இதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற முக்கிய நிகழ்வாக, சுந்தரமூர்த்தி சுவாமியும் சேரமான் பெருமாள் நாயனாரும் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, திருக்கோவில் நான்கு மாடவீதிகளிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிவனடியார்கள் தோளில் சுமந்து வந்த வெள்ளை யானை வாகனம், "ஓம் நமசிவாய" என்ற சிவநாம முழக்கங்களும், பக்தர்களின் அரோகரா கோஷங்களும் முழங்க, பக்தி நிறைந்த சூழலில் வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர்கள் தூவி, தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டு தரிசனம் செய்தனர். குறிப்பாக, சுந்தரமூர்த்தி சுவாமியும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்ற தெய்வீக வரலாற்றை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த குருபூஜை விழா, ஆண்டுதோறும் ஆடி சுவாதி நாளில் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஆன்மிக பரவசம் அடைந்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் சிவனடியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !