புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் இன்று (ஜூலை29) காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் இந்தியாவின்பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர்.
காலத்தால் அழியாத பாரம்பரியத்தை போற்றும் பக்தி, ஆன்மிக சிந்தனைகள் மற்றும் கூட்டு வழிபாட்டுடன் தெய்வீக ஆசிரியரும், நித்திய வழிகாட்டியுமான பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது. குல்வந்த் அரங்கம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவானது காலை 8:00க்கு வேத பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 8:20க்கு பிரசாந்தி பஜன் குழுவினரின் பக்தி இசை பிரசாதம் குரு வந்தனம் நடைபெற்றது.
காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி ஸ்ரீ எஸ்.எஸ்.நாகானந்த் வரவேற்புரையில், மனித வாழ்க்கையின் உன்னத நோக்கத்தையும், அந்த இறுதி இலக்கை நோக்கி மனிதகுலத்தை வழிநடத்துவதில் குருவின் தவிர்க்க முடியாத பங்கையும் எடுத்துரைத்தார். இடைவிடாத பகவத் சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அசைக்க முடியாத இறை நினைவின் மாற்றும் சக்தியை விளக்குவதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் மன்னர் பரீக்ஷித் மற்றும் ஷாமிக மகரிஷி ஆகியோரின் நிகழ்வை உதாரணமாகக் குறிப்பிட்டார்
காலை 9:10 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையாற்றினார். நாடு தழுவிய பிரேம பிரவாஹினி முன்னெடுப்பு குறித்துப் பேசினார். இதன் போது பகவானின் புனிதப் பாதுகைகள் இந்தியா முழுவதும் பயணம் செய்தன. ஏகலைவன், நசிகேதன் மற்றும் அர்ஜுனன் உடனான கிருஷ்ண பரமாத்மா போன்ற காலத்தால் அழியாத குரு-சீடர் உறவுகளைக் குறிப்பிட்ட அவர், நம்பிக்கை, சரணாகதி மற்றும் ஐயமற்ற கீழ்ப்படிதல் ஆகியவற்றின் விழுமியங்களை வலியுறுத்தினார். கிராமப்புற மக்களுக்கு இலவச மற்றும் தரமான மருத்துவ சேவையை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் பகவானின் உன்னதப் பணியில் ஒரு முக்கிய அங்கமாக, புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய் நடமாடும் மருத்துவமனையின் தொடக்க விழாவும் இன்று காலை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய டாக்டர் கே. நரசிம்மன் (இயக்குநர், ஸ்ரீ சத்ய சாய் நடமாடும் மருத்துவமனை), மருத்துவ வசதிகளைப் பெற இயலாதவர்களையும் சென்றடையும் வகையிலான பகவானின் தொலைநோக்குப் பார்வையிலான மருத்துவச் சேவைத் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார். 350-க்கும் மேற்பட்ட தன்னார்வ மருத்துவர்களின் பங்களிப்புடன் செயல்படும் இந்த நடமாடும் மருத்துவமனை, அவ்வப்போது நடத்தப்படும் மருத்துவ முகாம்களாக மட்டுமின்றி, தினமும் கிராமங்களுக்குச் சென்று சேவையாற்றுவதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலையும் ஆன்மீகத்தையும் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது. இம்மருத்துவமனையில் உள்ள விரிவான பரிசோதனை வசதிகள் மூலம் நோயாளிகள் தங்கள் சொந்த கிராமங்களிலேயே பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவதையும், அதிலேயே உள்ள மருந்தகத்தின் மூலம் மருந்துகள் உடனடியாக வழங்கப்படுவதையும் அவர் விளக்கினார். தொடர்ந்து காலை 9:25 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு மற்றும் பஜனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான் சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்து வருகின்றனர்.