உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவிலில் தரிசனத்துக்கு ‘ஆன்லைன்’ புக்கிங்

குருவாயூர் கோவிலில் தரிசனத்துக்கு ‘ஆன்லைன்’ புக்கிங்

பாலக்காடு: குருவாயூர் கோவிலில், மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்யும் நிலைக்கு, இனி முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்து எளிதாக தரிசனம் செய்வதற்கான, ‘ஆன்லைன் புக்கிங்’ சேவையை குருவாயூர் கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.


இது குறித்து, நிர்வாக குழு தலைவர் கோபிநாத் கூறியதாவது: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. ‘விர்ச்சுவல் கியூ’ முறையை பயன்படுத்தி பக்தர்களுக்கு சிரமமில்லாத, சுமுகமான தரிசனத்தை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கம். முதற்கட்டமாக, ஆக., 4ம் தேதி முதல் சோதனை முறையில், வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் இந்த ‘விர்ச்சுவல் கியூ’ புக்கிங் வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக பக்தர்கள் குருவாயூர் தேவஸ்தான வாரியத்தின் இணையதளமான https://guruvayurdevaswom.in என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம். உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பக்தர்களின் வசதிக்காகவும் சுமுகமான தரிசனத்தை உறுதி செய்யவும் நிர்வாகக் குழு எடுத்த முடிவின்படி, இந்த ஆன்லைன் புக்கிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !