ரீல்ஸ் மோகம் : ராமேஸ்வரம் கோயிலில் பெண்கள் குத்தாட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் ரீல்ஸ் மோகத்தில் பெண்கள் குத்தாட்டம் ஆடுகின்றனர். இதனால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட தென் மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியாவிலே இக்கோயில் 3ம் பிரகாரம் மிக நீளமான பிரகாரம் என்பதால், இங்கு பக்தர்கள் மொபைல் போனில் படம் எடுத்து கொள்வார்கள். இதனால் மொபைல் போனுக்கு தடை விதித்த கோயில் நிர்வாகம், 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் புகைப்படம் எடுக்க தனியாருக்கு டெண்டர் விட்டது. ஆனாலும் பக்தர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுப்பதை கோயில் நிர்வாகம் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் பாலி நகரை சேர்ந்த இரு பெண்கள், கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, பிரகாரத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் பாடல்களுக்கு குத்தாட்டம் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனை கண்டு பக்தர்கள் முகம் சுழித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது : ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் வியாபார ரீதியாக புகைப்படம் எடுக்க முந்தைய தி.மு.க., அரசு அனுமதித்தது கண்டனத்திற்குரியது. தற்போது பெண்கள் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிடுவது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதோடு, கோயில் புகழை களங்கப்படுத்தி உள்ளனர். இதனை தடுக்க வேண்டிய கோயில் காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. இதே நிலை நீடித்தால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இக்கோயில் சினிமா தியேட்டர் போல் மாறிவருவதை தடுத்து, பக்தர்களின் வழிபாட்டுத்தலமாக பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.