மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திர ரத கவி கல் இடிப்பு பக்தர்கள் அதிர்ச்சி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி என்ற பெயரில் தேர் வடிவிலான திருஞானசம்பந்தரின் பாடல் இடம்பெற்ற மார்பிள் கல் (சித்திரரத கவி கல்) இடிக்கப்பட்டது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகம் செப்., 17 நடக்கிறது. திருப்பணிகள் நடக்கும் நிலையில் 2018 பிப்.,2ல் தீப்பற்றிய கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தையொட்டி பசுபதீஸ்வரர் சன்னதி உள்ளது.
இச்சன்னதி பகுதியில் திருஞானசம்பந்தர் அருளிய திருஏழுகூற்றிருக்கையின் சித்திர கவி, தேர் வடிவில் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. திருப்பணி என்ற பெயரில் சித்திரரத கவி மார்பிள் கல்லையும், அருகில் உள்ள சுவரையும் இடித்து விட்டதாக ஹிந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகின்றன.
ஆலயம் காப்போம் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறியதாவது: எதற்காக, யார் இதை உடைத்தார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். திருப்பணி என்ற பெயரில் பழமைகளை சிதைப்பது கண்டிக்கத்தக்கது. அம்மன் சன்னதியில் அதிக டன் கொண்ட ‘ஏசி’ வசதி செய்யப்பட்டுள்ளது.
இது அந்த மண்டபத்தின் கருங்கற்களை பாதிக்கும்.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஆடி வீதிகளில் கோயில் கட்டுமானத்தை பாதிக்கும் வகையில் ‘ஹைமாஸ்’ விளக்கு பொருத்த பள்ளம் தோண்டப்பட்டு இரும்புத்துாண் ஊன்றப்பட்டுள்ளது. ‘பக்தர்களின் வசதிக்காக’ என்றுக்கூறி, கோயிலின் பாதுகாப்பையும், பழமையையும் சிதைப்பதை ஏற்க முடியாது என்றார்.
கோயில் தரப்பில் கேட்டபோது, ‘‘வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிக்காக துாண்கள் கொண்டு வருவதற்காக சுவர் உடைக்கப்பட்டது. விரைவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். தேர் வடிவிலான சித்திர கவியும் புதிதாக அமைக்கப்படும்,’’ என்றனர்.