உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகிரியில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

நீலகிரியில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்

நீலகிரி ; ‘ஆடி வெள்ளியில் அம்மன் கோவில்களில் நடந்த வழிபாடுகளில், மழை பொழிந்து, நோய் நொடிகள் அகன்று, தொழில் வளம் பெருக வேண்டும்,’ என, பிரார்த்தனை செய்யப்பட்டது. ‘எல் நினோ’ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் கடும் வெப்பம், மழை, வறட்சி ஆகியவை ஏற்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் போதிய பருவமழை பெய்யாத காரணத்தால், உள்ள அணைகளில் தண்ணிர் குறைய துவங்கி உள்ளது. இதனால், மின் உற்பத்தி பாதிப்பு; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மறுபுறம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி, ஆடி வெள்ளியான நேற்று, ஊட்டி மாரியம்மன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள்; வழிபாடுகள் நடந்தது. குன்னுார் வி.பி.,தெரு சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, மேளதாள முழக்கத்துடன் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், அம்மன் தேர் பவனியுடன், தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு புனித மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


ஐந்தாவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, கோவை வடக்கு மாவட்ட இந்து வியாபாரிகள் நல சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். தங்காடு சக்திபீடம் சுவாமி முக்தானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர். மழை பொழிந்து, நோய் நொடிகள் அகன்று, தொழில் வளம் பெருக பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, குன்னுார் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதேபோல, மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, மழை வர வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். –நிருபர் குழு– 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !