பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருநெல்வேலி: ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆக 3ல் கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடில்கள் அமைத்து தங்கி வழிபட்டு வருகின்றனர். இன்று 12-ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.