ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
ஆடித் திருவிழா 11ம் நாளான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும், ராமநாத சுவாமி, பிரியா விடை அம்மன் ரிஷப வாகனத்திலும் புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து மதியம் 3:20 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தினார். பின் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாலை 4:00 மணிக்கு மேல் சுவாமி, அம்மன் கோயிலுக்கு புறப்பாடாகினர்.
இதன் பின் கோயிலில் இரவு 7:20 மணிக்கு அனுமன் சன்னதி முன் சுவாமி, அம்மனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இன்று இரவு 7:00 மணிக்கு மேல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது.