உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழங்கால ஓண வழிபாட்டு மரபுகளை உயிர்ப்புடன் காக்கும் பார்த்தல இல்லம்

பழங்கால ஓண வழிபாட்டு மரபுகளை உயிர்ப்புடன் காக்கும் பார்த்தல இல்லம்

பாலக்காடு; ​நவீன கால ஓணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நூற்றாண்டுகால பழமையான சடங்குகளையும் ஆன்மிக மரபுகளையும் துளியும் மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார் சங்கரநாராயண வாரியர்.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் மண்ணம்பற்ற பார்த்தல வாரியத்தைச் (இல்லம்) சேர்ந்தவர் சங்கரநாராயண வாரியர். ​பொதுவாக அஸ்த நட்சத்திரத்தில் ஓணப் பூக்கோலம் தொடங்கும் வழக்கம் உள்ள நிலையில், பார்த்தல இவரது வாரியம் (இல்லம்) மரபுப்படி ஆடி (கற்கடக) மாதத் திருவோண நாளிலேயே பூக்கோலம் போட தொடங்குகின்றனர். ஓணப் பூக்கோலத்தின் நடுவில் களிமண்ணால் வைக்கப்படும் ‘மாதேவர்’ உருவங்களுக்குப் பின்னால் ஆழமான ஆன்மிகக் கணக்கீடுகள் இருப்பதாக இவர் சுட்டிக்காட்டுகிறார்.


​இது குறித்து சங்கரநாராயண வாரியர் கூறியதாவது: ​அஸ்தம் முதல் கேட்டை வரை 3 - 2 என்ற எண்ணிக்கையில் விஷ்ணு மற்றும் லட்சுமி உருவங்கள், ​மூலம் நாளில் 5 - 3 என்ற விகிதத்தில் தெய்வ உருவங்கள், ​பூராடம் நாளில் 7 - 5 என்ற வரிசை, ​உத்திராடம் நாளில் 8 - 7 என்ற கணக்கில் பிரதிஷ்டை, ​திருவோணம் நாளில் 11 - 9 என்ற எண்ணிக்கையில் வாமனர், லட்சுமி மற்றும் மகாபலி வடிவங்கள் என ஆகும் பூக்கோல மாதேவர் பிரதிஷ்டை விதிமுறைகள். ​திருவோணத் திருநாளில் முறைப்படி புது ஓணப்புடவை வழங்குதல், அப்பம், அடை மற்றும் பழ வகைகளைப் படைத்து நைவேத்தியம் செய்தல் போன்ற சடங்குகள் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. ​உத்திராட நாள் இரவில் ஊரின் பாணர் சமுதாய மக்கள் வாத்திய முழக்கங்களுடன் மாவேலி மன்னரை வரவேற்க, பெண்கள் பாரம்பரிய ‘நாவோறு’ என்ற பாடலை பாடி வழிபாட்டை முன்னெடுக்கின்றனர். பத்து நாட்கள் சடங்குகளும் நிறைவடைந்து பத்தாம் நாள் வாமனர் நேரில் பிரசன்னமாவார் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.​தொன்மை வாய்ந்த ‘பூவிளி’ என்ற கூவல்கள் கூட மறக்கப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், முன்னோர்களின் வழிபாட்டு நெறிமுறைகளைத் தொய்வின்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !