சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
சேலம் தேர் வீதி ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த, 24ல் கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. 25ல், 1,008 சுமங்கலி பெண்களுடன் திருவிளக்கு பூஜை நடந்தது. 26ல் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டு, ராஜகணபதி கோவிலை அடைந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி, மூலவர், தங்க கொடி மரத்துக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடந்தது. நேற்று, கோபுரத்தில் கலசம், விநாயகர் உருவ சிலைகளுக்கு கவசம் பொருத்தும் பணிகள் நடந்தன. 2, 3ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பன்னிரு திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.
இன்று காலை, 8:10 மணிக்கு விமான கலசங்களுக்கும், 8:30 மணிக்கு மேல் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பூப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத் துறையினர், அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா தலைமையில் நிர்வாகிகள், திருப்பணி உபயதாரர்கள் செய்துள்ளனர்.
எப்போதும் வழிபடலாம் ராஜகணபதியை... பொதுவாக கோவில்களில் மதிய வேளையிலும், இரவிலும் நடை சாத்தப்படும். ஆனால் சேலம் ராஜகணபதி கோவிலில் நடை சாத்தப்பட்டாலும், கதவு வழியே மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ராஜகணபதியை தரிசிக்க முடியும். இதனால் நள்ளிரவாக இருந்தாலும், மதிய வேளையிலும், வியாபாரிகள், மக்கள் உள்ளிட்டோர், எப்போது வேண்டுமானாலும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். குறிப்பாக முதல் அக்ரஹாரம் பகுதியை கடந்து செல்வோர், ஒரு நிமிடம் நின்று, கணபதியை தரிசனம் செய்து விட்டே செல்கின்றனர்.