அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
ADDED :1 days ago
அன்னூர்: கிருத்திகையை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று தங்கத்தேரோட்டம் நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், பல கோடி ரூபாய் செலவில் தங்கத்தேர் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த பிப். 1ம் தேதி முதல் முறையாக தேரோட்டம் நடந்தது. அதன் பின்னர், ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று தங்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆவணி மாத கிருத்திகையான நேற்று மாலை 6:45 மணிக்கு தங்க தேரோட்டம் துவங்கியது. கோவில் உட்பிரகாரத்தில் மின்னொளியில் தங்கதேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.