வேளாங்கண்ணியில் ஈஸ்டர் பண்டிகை!
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த, ஈஸ்டர் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, பங்கேற்றனர்.புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு இறந்த ஏசு கிறிஸ்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி, ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்தது. நேற்று முன் தினம் இரவு, 10: 00 மணிக்கு, தேவாலய அதிபர் மைக்கேல் உள்ளிட்ட, 10 பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி, தேவாலய கலையரங்கில் துவங்கியது. இரவு, 12:00 மணிக்கு, உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து, பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி, தத்ரூபமாக நடத்தி காட்டப்பட்டது. நள்ளிரவு, 1:45 மணி வரை, நடந்த சிறப்பு திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கைகளில், மெழுகுவர்த்தி ஏந்தி, பங்கேற்றனர்.தொடர்ந்து, நேற்று காலை, 6:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேவாலயத்தில், திருப்பலிகள் நடைபெற்றன. மாலை, 6:45 மணிக்கு நடந்த, உயிர்த்த ஏசு கிறிஸ்து, தேர்பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.