காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4697 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று காலை நாகவாகனம் உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது. இன்று இரவு, திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை உத்திரப் பெருவிழா நடைபெறும். நடப்பாண்டு சித்திரைத் திருவிழா, கடந்த 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடந்து வருகிறது. நான்காம் நாள் உற்சவமான நேற்று, காலை 7:00 மணிக்கு, ஸ்ரீசுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீகச்சபேஸ்வரர், நாகவாகனத்தில் எழுந்தருளினார். இரவு, இடப வாகனம் (சங்கு ரிஷபம்) வாகனத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று காலை, அதிகார நந்தி சேவை உற்சவமும், இரவு பிரபல உற்சவமான, திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.