கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு!
ADDED :4712 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், பகவதி அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும், முக்கிய திருவிழாக்களில் ஒன்று, வைகாசி விசாக திருவிழா. கடந்த, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒன்பதாம் நாள் விழாவில், தேரோட்டம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று, முக்கடல் சங்கமத்தில் அமைந்துள்ள, ஆராட்டு மண்டபத்தில், தேவிக்கு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மேல்சாந்திகள் மற்றும் பூஜாரிகள், விக்ரகத்துடன் கடலில் மூழ்கி, ஆராட்டு நடைபெற்றது. கிழக்கு வாசல் வழியாக தேவி, கோவிலுக்கு எழுந்தருளினார். பின், மூலஸ்தானத்தில், தீபாராதனை நடைபெற்றது.