ஜெகதளாவில் கன்னி ஹெத்தையம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
குன்னூர்; குன்னூர் ஜெகதளா கிராமத்தில் படுகரின மக்களின் பாரம்பரிய கன்னி ஹெத்தை அம்மன் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், படுகரின மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதில், ஜெகதளா ஆறுார் மக்களால் கொண்டாப்படும், ஹெத்தையம்மன் பண்டிகை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு, பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர்; கடந்த 9ல் காரக்கொரையில் பூ குண்டம் இறங்கினர். இன்று கன்னி ஹெத்தையம்மன் கோவில், அமைந்துள்ள ஜெகதளாவில், ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவிலில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது. மடியாரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அம்மன் ஊர்வலம் நடந்தது. அருள்வாக்கு கூறப்பட்டது. ஹெத்தை தடியுடன், ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக ஜெகதளா மக்கமனைக்கு வந்தனர். இதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் ஹெத்தையம்மனை பூசாரி கைகளில் ஏந்தி, வந்தார். வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது ஹெத்தைக்காரர்களை நடக்க வைத்தனர். பாரம்பரிய உடை அணிந்த சிறுமியர், மஞ்சள் நீர் தெளித்தனர். பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கினர். பிறகு தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. ஜெகதளா ஹெத்தையம்மன் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தி பஜனை பாடலுக்கு ஏற்ப வண்ண குடைகள் ஏந்தி நடனமாடினர். அனைவரும் அம்மனை வரவேற்கும் விதமாக, யா ஹோய் என்ற வார்த்தையை அனைவரும் ஒரே போல கூறி வரவேற்றனர். சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த படுக மக்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத்தினர் உட்பட அனைத்து சமுதாயத்தினர் விழாவில் பங்கேற்றனர்.