உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயணம் பகுதி - 30

ராமாயணம் பகுதி - 30

பரதன் இப்படி சொல்வான் என சற்றும் எதிர்பாராத கைகேயி மிகவும் சாமர்த்தியமாக, பரதா, நீ உன் தந்தை இறந்த வருத்தத்தில் உன்னை மறந்து பேசுகிறாயா? நான் உனக்கு நல்லது செய்வதற்காகவே இந்த நாட்டை கேட்டு வாங்கினேன். உன் அண்ணன் ராமனைப் பற்றி நான் தசரதரிடம் எதுவுமே சொல்லவில்லை. அவன் நல்லவன் தான். எந்த பிராமணனின் சொத்தையும் அவன் அபகரிக்கவில்லை. யாரையும் அவன் இம்சை செய்ததில்லை. அவனுக்கு உன் தந்தை பட்டம் சூட்டம் இருந்தார். அதை உனக்காக கேட்டுப் பெற்றேன். அவர்கள் காட்டிற்கு சென்றதும் தசரதர் துக்கம் தாங்காமல் இறந்துபோனார். உனக்காகத்தான் நான் இத்தனை இழப்புகளையும் சந்தித்தேன். இதில் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. உன் தந்தையின் ஈமக்கடன்களை விரைவாக செய்து முடித்துவிட்டு, உடனடியாக இந்த ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள், என்றாள். பரதனுக்கு நெஞ்சு கொதித்தது. ஒரு தாய்க்குரிய எந்த பண்பாடும் உன்னிடம் இல்லை. என் அண்ணன் ராமன் அவரது தாயிடம் எப்படியெல்லாம் பணிவாக நடந்து கொண்டாரோ, அதேப்போல்தான் உன்னிடமும் நடந்து கொண்டார். கவுசல்யாதேவியும் உன்னை தனது உடன்பிறந்தவளாகவே கருதினார். யார் மூத்த பிள்ளையோ அவருக்குத்தான் அரசாட்சி கிடைக்கும் என்ற சாதாரண இலக்கணம் கூட உனக்கு தெரியவில்லையா? அதுமட்டுமல்ல அவர் பாவமே செய்யாதவர். மிகப்பெரிய வீரர். அடக்கமுள்ளவர். அப்படிப்பட்ட ஒரு உத்தமரை இங்கிருந்து காட்டிற்கு துரத்தியதால் உனக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது. உன் பேராசையால் ஒரு நல்லவரை இங்கிருந்து விரட்டி விட்டாயே. கேடுகெட்ட இந்த ராஜ்யத்தை எனக்கு கொடுப்பதற்காக மிகப்பெரிய பாவத்தை செய்து விட்டாயே. என் தந்தை தர்மத்தின் தலைவனாக இருந்தார். அவருடைய பலமும் என் அண்ணன் ராமனின் பலமும் இணைந்தல்லவா இவ்வளவு பெரிய ராஜ்யத்தை காத்துவந்தது. நானோ எளிய கன்றுக்குட்டிக்கு சமமானவன். இவ்வளவு பெரிய ராஜ்யபாரத்தை என்னால் எப்படி ஏற்கமுடியும். ஒருவேளை எனக்கு இந்த ராஜ்யத்தை ஆளும் சக்தியிருந்தாலும் கூட, உனது கெட்ட செயலால் கிடைத்த இந்த அரசாட்சியை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிடுவேன். நீ பிறந்த வீட்டையே எடுத்துக்கொள். உன் வீட்டில் என்ன நடக்கிறது. குடும்பத்தின் மூத்தவர்கள் தானே அரசாட்சியை ஏற்கிறார்கள்? ஆனால் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த உனக்கு இந்த கேடுகெட்ட புத்தி எப்படி வந்தது. என்னை சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு, நீ இந்த நாட்டை ஆளவேண்டும் என கணக்குப்போட்டிருக்கிறாய். நான் இப்போதே காட்டிற்கு புறப்படுகிறேன். என் அண்ணன் காலில் விழுந்தாவது அவரை அழைத்து வருவேன். அவருக்கு முடிசூட்டுவேன். உன் கண் முன்னால் இதெல்லாம் நடக்கப்போகிறது. அதைப்பார்த்து உன் வயிறு எரியப்போகிறது, என்றான். ஸ்தம்பித்து நின்ற கைகேயியை பரதன் இன்னும் கடுமையாக நிந்திக்க ஆரம்பித்தான். உன்னைப் போல கொடியவள் இந்த உலகில் யாரும் இல்லை. நீ மட்டும் அல்ல, உனது தாயும் கொடுமைக்காரிதான். அவள் செய்த கொடுமையின் காரணமாக எனது தாத்தா அவளை நாட்டைவிட்டே துரத்திவிட்டார். உன் தாயைப் போல தானே நீயும் இருப்பாய். நீயும் இவ்வூரிலிருந்து ஓடிவிடு. என் தந்தையைக் கொன்ற கொலைகாரி நீ. அதுமட்டுமல்ல! என் சகோதரர்களையும் இந்த ஊரைவிட்டே துரத்திவிட்டாய். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என் உயிர் இப்போதும் இந்த உடலில் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. உன்னைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். என் தந்தை, என் தமையன்மார், என் அண்ணி அனைவரையும் நீ கொன்றுவிட்டாய். அதுமட்டுமல்ல, அயோத்தி நகரிலுள்ள அத்தனை பேரையும் கொன்ற கொலைகாரியாக, குற்றவாளியாக நிற்கிறாய். இந்த பாவத்திற்காக நீ கண்ணீர் விட்டு கதறு. இந்த நாட்டு மக்களும், ராமனும், சீதையும் உனக்கு என்ன கேடு செய்தார்கள்? இந்த குலத்தை அழித்த உனக்கு ப்ரூணஹத்யா என்ற தோஷம் (வேதம் கற்ற பிராமணனை கொலை செய்த குற்றம்) அணுகட்டும். உனக்கு சொர்க்கம் என்பது இனி இல்லை. நீ நரகத்திற்கு செல்வது உறுதியாகி விட்டது. அதுமட்டுமல்ல, நீ செய்த பாவத்தின் பலன் என்னையும் சேர்ந்து விட்டது.  இந்த உலகம் உள்ளளவும் என்னை கடுமையாக திட்டித்தீர்க்கும். உன் பாவச்செயலுக்கு துணை நின்றதாக என்னையும் சந்தேகிக்கும். தாய் என்ற உருவத்தில் என் எதிரே நிற்கும் எதிரி நீ. உன்னால் எத்தனை பேர் மாங்கல்யத்தை இழந்து தவிக்கிறார்கள். உன் தந்தை அசுவபதியின் பெயரை நீ கெடுத்துவிட்டாய். உன்னைப்போல ராட்சஷி இந்த உகில் யாரும் இல்லை. கவுசல்யாதேவிக்கு ராமபிரான் ஒரே ஒரு மகன். அவரை பிரித்த நீ நாசமாய் போவாய். உனக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும். தாய் தந்தையின் முகம், கழுத்து, மார்பு, வயிறு, கைகள், கால்கள், மூக்கு, விரல்கள், இருதயம் ஆகியவற்றின் சாரத்தில் இருந்து ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. எனவே ஒரு தாய்க்கு தன் உடன் பிறந்தவனைவிட குழந்தையின்மீது இயற்கையாகவே பாசம் உண்டாகிறது. இதையெல்லாம் தெரிந்த நீ கவுசல்யாதேவியைவிட்டு எப்படி ராமனை பிரிப்பாய்? ஒரு கதைசொல்கிறேன் கேள்.ஒரு விவசாயி தனது இரண்டு காளைகளை ஏரில் பூட்டி நிலத்தை உழுதுகொண்டிருந்தான். தொடர்ந்து உழுததால் அந்த காளைகள் மயங்கி விழுந்தன. தன் வம்சத்தில் பிறந்த அந்த காளைகளை பார்த்து காமதேனு அழுதது. அதன் கண்ணீர்த்துளிகள் கீழே விழும்போது அவ்வழியாக வந்த தேவேந்திரனின் உடலில் பட்டன. தேவேந்திரன் காமதேனுவிடம் அதற்கான காரணத்தை கேட்டான். அதற்கு காமதேனு, என் வம்சத்தில் பிறந்த இரண்டு காளைகள் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றிற்கு எழவே சக்தி இல்லாத நிலையில் அந்த விவசாயி அவற்றை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறான். இதைக் கண்டு என் இதயம் கலங்குகிறது. அந்த காளைகளுக்கும் எனக்கும் ரத்த சம்பந்தம் இருக்கிறது என பதிலளித்தது. இப்படி மிருகங்களே ஒன்றிற்கொன்று பாசமாக இருக்கும்போது நீ எப்படி கவுசல்யாவின் மகனை அவளை விட்டுப் பிரிக்கலாம். நீ இப்போதே இங்கிருந்து ஓடிவிடு. நீ செய்த பாவத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ இங்குதான் இருப்பாய் என்றால், நான் இங்கு வாழமாட்டேன். நீ செய்த தவறுக்கு நெருப்பில் போய்விழு. இனி நீ உயிரோடு இருக்கக்கூடாது. நெருப்பில் குதிக்க பயமாக இருந்தால், கயிறைக்கட்டி அதில் தொங்கிவிடு. அப்படிச்செய்தால் தான் என் துக்கம் தீரும், என ஆவேசமாக சொன்ன பரதன் அப்படியே மயங்கி சாய்ந்துவிட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !