அரிட்டாபட்டியில் பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
மதுரை: மதுரை அரிட்டாபட்டியில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டினை, தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது: அரிட்டாபட்டியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமண துறவிகளுக்கு படுக்கைகள் அமைத்து கொடுத்த விபரம், அங்குள்ள கழிஞ்சமலையில் பண்டைய தமிழ் (தமிழ் - பிராமி) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.கி.மு.2-ம் நூற்றாண்டில், நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் என்பவனும், இலஞ்சி எளம்பேராதன் மகன் எமயவன் என்பவனும் சமணத் துறவிகளுக்கு குகைத்தளங்களையும், படுக்கைகளையும் (முழாகை) அமைத்துக் கொடுத்தள்ளனர். கழிஞ்சமலை அருகில் ஆப்டான் மலை, ராமாயி மலைகள் உள்ளன. மூன்று மலைகளில் இருந்து வரும் மழைநீரை குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் தேக்கி வைப்பதற்கு கண்மாய் வெட்டி, கரை அமைத்து தண்ணீரை ஒழுங்குபடுத்தி முறையாக வழங்கிட மதகு (குமிழி) அமைக்கப்பட்டுள்ளது.இதனை கி.பி.13ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் "ஆனைமேல் கொண்டான் என்ற பாண்டிய நாட்டு அதிகாரி செய்துள்ளான். இந்நிகழ்வை பற்றிய குமிழி கல்வெட்டு அரிட்டாப்பட்டி கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.13ம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையும், நீர் ஒழுங்குமுறை திட்டமும் பாண்டிய நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது, என்றார்.