செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ADDED :4517 days ago
திருப்போரூர்: செங்கழுநீர் அம்மன் கோவிலில், 21ம் ஆண்டு ஆடித்திருவிழா சிறப்பாக நடந்தது. திருப்போரூர், திருவஞ்சாவடி தெருவில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, 21ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த ஞாயிறன்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 10:00 மணிக்கு, சரவண பொய்கையில் இருந்து, கங்கை நீர் கொண்டு அபிஷேகமும், கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 3:00 மணிக்கு, பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு, அம்மன் மலர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.