விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நாளை துவக்கம்
ADDED :4487 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விருத்தாசலம் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நாளை (31ம் தேதி) துவங்கி, வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு, நாளை காலை 9:15 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. தினம் காலை பல்லக்கில் சுவாமி உற்சவம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 7:30 மணிக்கு தேர்த்திருவிழா, மறுநாள் தீர்த்தம் கொடுத்தல், இரவு விருத்தாம்பிகை அம்மன் பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. 10ம் தேதி காலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.