வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கோலாகலம்
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில், ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன், கோலாகலமாகத் துவங்கியது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில், "கீழை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆண்டுதோறும், ஆக., 29ம் தேதி துவங்கி, செப்., 8ம் தேதி வரை, திருவிழா நடைபெறும். திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று மாலை, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின், "மரியே வாழ்க என்ற விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன், கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. முன்னதாக, மாலை, 6:00 மணிக்கு தேவாலய முகப்பில் இருந்து கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, இரவு, 7:30 மணிக்கு தேவாலய முகப்பை வந்தடைந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி, செப்., 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது. 8ம் தேதி, மாதா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.