மீனாட்சி கோயில் நவராத்திரி விழா
ADDED :4542 days ago
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா, அக்.,5 முதல் 14 வரை நடக்கிறது. இந்நாட்களிலும், அக்.,10 சாந்தாபிஷேகம் தினத்தன்றும் கோயிலில், உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா பதிவு செய்யப்பட மாட்டாது. உற்சவ நாட்களில், தினமும் மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி, கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடக்கும். பூஜை கால நேரங்களில், பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படமாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குதான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும் என கோயில் இணைகமிஷனர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.