150 ஆண்டு கால அரச மரத்தை வெட்ட கூடாது: கலெக்டருக்கு கோரிக்கை!
மதுரை: மதுரை தெற்குமாசிவீதியில் செட்டிகுருநாதன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்துக்குள் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், காலபைரவர், வில்லபசித்தர் ஆகிய சன்னதிகள் உள்ளன. தினமும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தக்கோவில் வளாகத்துக்குள் 150 ஆண்டு பழமைவாய்ந்த அரசமரம் உள்ளது. திடீரென்று இந்த மரத்தை வெட்டுவதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மரத்தை வெட்டுவதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை தடுக்க வேண்டும் என்ற அந்த பகுதியை சேர்ந்த சிவசங்கர் உள்பட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.மரத்தை வெட்டும் முடிவை கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.