திருட்டு நடந்த கோவில்களில் புதிய உண்டியல்!
ADDED :4509 days ago
தாம்பரம்: தாம்பரம் பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த, இரண்டு கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டது. மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட்பேங்க் காலனியில் உள்ள விநாயகர் கோவிலில், கடந்த, 23ம் தேதி 21 கிலோ வெள்ளி, 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது. அதேபோல், திருநீர்மலையில் உள்ள மகமாயி அம்மன் கோவிலில் உள்ள 2 கிராம் அம்மன் தாலி திருடு போனது. இதுகுறித்து, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அறநிலையத் துறை உதவி ஆணையர் விஜயா தலைமையில், அதிகாரிகள் இரண்டு கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். அதையடுத்து, இரண்டு கோவில்களிலும் புதிய உண்டியல்கள் வைக்கப்பட்டன.