வேலாயுதசாமி கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுசாமி கோவிலில் உற்சவ காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது.இன்று மாலை 4.00 மணிக்கு சஷ்டி குழு சார்பில் திருவிளக்கு பூஜையும், அபிஷேக அலங்கார ஆராதனையும் நடக்கிறது. நாளை (6ம் தேதி) மாலை 6.00 மணிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடக்கவுள்ளது. நவ. 7ம் தேதி மாலை 4.00 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் சென்று வேல் வாங்கும் உற்சவம், அபிஷேக அலங்கார தீபராதனை நடக்கிறது. கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வரும் 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. அதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வேலாயுதசாமி எழுந்தருள, காளியம்மனிடம் இருந்து பெறப்பட்ட சக்தி வேலுடன் பொன்மலையை சுற்றி வரும். அப்போது, சூரனை நோக்கி சென்று வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பொன்மலை வேலாயுசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி மெயின்ரோடு வழியாக, சிவலோகநாதர் கோவில் அருகே பொன்மலையின் அக்னி மூலையில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், பின்பு மலையின் கன்னி மூலையான தேரோடும் வீதியில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், கிருஷ்ணசாமிபுரம் வீதியில் மலையின் வாயு மூலையில், மூன்றாவது சூரனான பானுகோபன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மன் வதம் செய்யும் படலம் கோவை ரோட்டின் மலையின் நிருதி மூலையிலும், நான்காவது சூரனையும் வேலாயுதசாமி வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் விரதமிருந்த பக்தர்கள் காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவர்.நவ. 9ம் தேதியன்று காலை 10.மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நவ. 10ம் தேதியன்று பகல் 12.00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.