விளமல் பதஞ்சலி மனோகர கோவிலில் கார்த்திகை செவ்வாய் ராகு கால பூஜை!
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர கோவிலில், நேற்று நடந்த ராகுகால பூஜையில் திருமணம் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம், திருவாரூர் விளமல் பகுதியில் வரலாற்றுப் புகழ் பெற்ற மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் மகா சக்தி ஸ்ரீவிதா சக்தி பூஜை நடக்கிறது. இங்கு அம்பாள் ஸ்ரீசக்கரம் தாங்கி ஆதி அம்பிகையாகவும், மஞ்சுளா வாணியாகவும் சகல லோகத்திற்கும் சவுபாக்கியம் அருள்பவள். ஆதலால் வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் ஸ்ரீவித்யா பூஜை நடத்தினால் திருமணத் தடை நீங்கும். வர்த்தக வியாபாரம் செழிப்பதுடன், கலை, கல்வி, ஞானம் பெருகும். திக்குவாய் குழந்தைகள் மற்றும் வாய் பேச முடியாதவர்களும் அக்னி தீர்த்தத்தில் நீராடி ஈசன் திருவடியை வணங்கி பூஜையில் பங்கேற்றால் சர்வ விமோனம் பெற்று சகல சவுபாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம். இங்கு நடக்கும் ராகுகால பூஜையில், திருமணத் தடை உள்ளவர்கள் பங்கேற்று, ஜாதகத்தை பூஜையில் வைத்து, அம்பாளை பிரசாதமாக திருவுருவம் வைத்து வழிபட்டு பூஜித்தவர்கள், தியாகராஜரை தரிசிக்க வேண்டும். இதனால் சாப விமோசனம் அடைவார்கள். பிறவியில் முக்தி பெறுவார்கள். கார்த்திகை மாதத்தில் சிறப்பு ராகுகால பூஜை நேற்று நடந்தது. சந்திரசேகர சிவாச்சாரியர் சிறப்பு பூஜையை நடத்தினார். இந்த பூஜையில் சுற்றுப்பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தொடர்புக்கு கோவில் அர்ச்சகரை 9489479896 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.