உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது (பகுதி5)

அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது (பகுதி5)

அகத்தியர் ஞானம் பாடல் - 04

நன்றான ரேசகத்தை முன்ணேகேளு
நலமான பூரகத்தை வங்கிகொள்ளு
வொன்றானகும்பகத்தை யற்றுப்பாரு
வுண்மையென்ன விடங்கேளு வுறுதிகேளு
பண்றாகபழகுவதுக் கடிகைகேளு
பதிவுசொன்னால்மூன் றுக்கும் வடிவுகேளு
குன்றானமூன் றுக்குங் குறிகுணங்கள் சொன்னால்
குருவுகுடலாவிபொருள் தத்தம் பண்ணே (04)

அறிமுக புரிதல்: இந்த பாடலில் குருதேவர் பிராணசாதனையின் அங்கங்களை விளக்குகிறார், பூரகம் என்றால் மூச்சினை உள்ளிழுத்தல் என்று பொருள், கும்பகம் என்றால் இழுத்த மூச்சினை நுரையீரலில் நிலை நிறுத்தல் என்று பொருள், ரேசகம் என்றால் இழுத்த மூச்சினை வெளிவிடல் என்று பொருள். இவற்றை எப்படி செய்யவேண்டும் என்பதனை குருவிடம் அறிவதற்கு மாணவனிற்கு சில அடிப்படைக் கேள்விகள் இருக்க வேண்டும். அவற்றை இந்த பாடலில் கூறுகிறார். இனி பாடலின் பொருளினைப் பார்ப்போம்.

பொருளுரை:

நன்றான ரேசகத்தை முன்ணேகேளு: ரேசகம் செய்யும் அளவு எவ்வளவு என்பதனை கேட்டுக்கொள்
நலமான பூரகத்தை வங்கிகொள்ளு: பூரகம் உன்னால் எவ்வளவு செய்யமுடியும் என்பதனை செய்துபார்த்து அறிந்துகொள்.
வொன்றானகும்பகத்தை யற்றுப்பாரு: உனக்கு எவ்வளவு நேரம் மூச்சை அடக்கி இருக்கமுடியும் என்பதனை அனுமானித்துக்கொள்.
உண்மையென்ன விடங்கேளு உறுதிகேளு: கும்பகம் என்றால் உண்மையில் எந்த இடத்தில் மூச்சினை நிறுத்துவது என்பதனைக் உறுதியாக கேள்.
பண்றாகபழகுவதுக் கடிகைகேளு: இனி உனது ஆற்றலிற்கு தக்க பழகுவதற்கு கால அளவு கேள்.
பதிவுசொன்னால்மூன் றுக்கும் வடிவுகேளு: அவற்றை சொன்னால் பூரக, கும்பக, ரேசகங்க்களினை எப்படி செய்வது என்ற நேர்முக செயல்முறையினைக் கேள்.
குன்றானமூன் றுக்குங் குறிகுணங்கள் சொன்னால் குருவுகுடலாவிபொருள் தத்தம் பண்ணே: மூச்சினை எப்படி முறையாக இழுத்து, நிறுத்தி வெளிவிடுவது?, அதனை செய்வதற்குரிய கால அளவு என்ன? எங்கெங்கு மூச்சினை நிறுத்தப் பழகவேண்டும்? அதனால் வரும் குணம் குறிகள் என்ன என்பது பற்றி தெளிவான குணங்க்குறி சொல்லி இந்த பிராண இரகசியத்தை கற்றுத்தரும் குருவிற்கு நீ வெறென்ன செய்ய முடியும்? அதனால் உனது உடல், உயிர், பொருள் அனைத்தையும் சமர்ப்பித்து சரணடை.

நேர்ப்பொருள்: மூன்றாவது பாடலில் அசபை (அஜபா) ஜெபமும், வாசியான மூச்சின் மூலம் விழிப்புணர்வு அடையும் பயிற்சிகளை கூறினார். அதாவது வாசியான மூச்சினை (பிராணசக்தியினை) எமது விழிப்புணர்வின் மூலம், மந்திர ஜெபத்தினால் மூலாதாரத்தில் இருந்து ஆஞ்சா சக்கரம் வரை கொண்டுவந்து, பின் அம்பரமான சகஸ்ரதளத்தில் சேர்க்கும் முறையினை கூறினார். இதன்போது வரும் அனுபவங்கள் பற்றியும் கூறப்பட்டது. இனி நான்காவது பாடலில் பிராணசக்தியினை அதிகரிக்கச்செய்யும் முக்கியமான கும்பகப்பிராணாயாமம்பற்றி கூறுகிறார். அதன்படி மாணவன் முதற்படியில் கும்பகப்பிரணாயாமம் செய்வதற்கு உரிய தனது ஆற்றல் எவ்வளவு என்பதனை சொந்த அனுமானத்தில் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். அதன் படி கும்பகபிரணாயாமத்தின் சூத்திரத்தினை வகுத்துக்கொள்ளவேண்டும், பிரணாயாம சூத்திரம் என்பது கும்பகம் செய்யும் அளவிலிருந்து பூரக ரேசக அளவுகளை வகுத்துக்கொள்வதாகும். இது பற்றி கீழே சித்தவித்யா விளக்கவுரையில் பார்ப்போம். அதன் பின் எப்படி செய்யவேண்டும் என்பதற்கான முறையிணையும் செய்யும் போது உடல், மனம் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்கள், குணங்குறிகள் என்ன என்பதனையும் கேட்டு தெரிந்து கொள், இப்படி தெளிவாக பிராணணை கட்டுப்படுத்தும் இரகசியத்தினை சொல்லித்தரும் குருவிற்கு உன்னால் செய்யக்கூடிய கைமாறு என்னவாக இருக்க முடியும், உனது உடல் பொருள் ஆவியினை தியாகம் செய்வதேயாகும்.

சித்தவித்யா விளக்கவுரை

இன்று பிராணாயாமம் பழகுபவர்கள் அதிலும் கூறிப்பாக கும்பகபிரணாயாம் பயிற்சி செய்பவர்கள், எடுத்த முதற்படியிலேயே கும்பகம் செய்யும் அளவினை நிர்ணயம் செய்துவிடுகின்றன, இது தவறாகும், முதலில் சுவாச கட்டுப்பாட்டினை அஜபா ஜெபத்தினால் பெற்று, பின் ஆழ்ந்த சுவாசம் எடுக்கப்பழகிய பின்னர் இயல்பாக எதுவித கஷ்டமும் இல்லாமல் முள்ளந்தண்டு நேராக இருக்கும் போது எவ்வளவு நேரம் முயற்சியில்லாமல் மூச்சினை கட்டுப்படுத்த முடிகிறதோ அதுவே கும்பகம் செய்வதற்கான அளவாகும். இந்த அளவினை குருவின் துணையுடன் தனக்கு எத்தனை வினாடிகள் என்பதனை அறிந்து அதன்படி பூரக, ரேசகங்களின் அளவுகளை நிர்ணயம் செய்துகொள்ளவேண்டும், அதாவது ஆரம்பத்தில் எமது உடலினால் எவ்வளவு ஆழமாக பூரிக்க (உட்சுவாசிக்க) முடியும் என்பதனையும், கும்பிக்க (உள் நிறுத்த) முடியும் என்பதனையும், ரேசிக்க முடியும் என்பதனையும் குருவின் துணையுடன் தெளிவாக விளங்க்கிகொள்ள வேண்டும். இது எவ்வளவு முக்கியமான ஒரு உபதேசம்! ஏனெனி இன்று பலர் பிரணாயாம பழகுகிறேன் என்று என து யோக ஆசிரியர் ஒருதடவை இழுத்து 16 தடவை அடக்கி 08 தடவை விடவேண்டும் என தமது உடல் தாங்கும் அளவு எவ்வளவு என்பதனை தெரியாமல் பயிற்சித்து கடைசியில் உடல்நரம்பு கோளாற்றினை அடைகின்றனர்.

எமது அனுபவத்தில் நாம் குருதேவருடன் இருக்கும் காலத்தில் ஒரு பாடசாலையில் உயர்தரம் (+2 பயிலும்) இளைஞன் ஒருவன் பெற்றோருடன் குருதேவரை சந்திக்க வந்தான், அவனது பிரச்சனை என்னவேன்றால் கண்ணை மூடினாலும், திறந்தாலும் கண்முன்னே பெரிய பிரகாசமான ஒரு ஒளி எப்போதும் தெரிந்துகொண்டிருக்கின்றதாம், அதனால் அவனால் ஒழுங்க்காக தூங்க முடியவில்லை, எதையும் கிரகிக்கும் அளவிற்கு மனம் ஒருமைப்படவில்லை, அப்படி என்ன நடந்தது அவனுக்கு என விசாரித்தபோது தான் பரிட்சையில் நல்ல புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகம் சென்று பொறியியல் கற்கவேண்டும், அதற்கு பிரணாயாமம் செய்தால் ஞாபக சக்தி அதிகமாகும் என எண்ணிக்கொண்டு எங்கோ வாசித்த படி நேரடியாக கும்பகப்பிரணாயாம செய்ய ஆரம்பித்திருக்கிறான், அதனால் பிராணசக்தி அதிகமாகி அவனது ஸ்தூல நரம்புகளை பாதித்துள்ளது. அவனை ஆராய்ந்து பார்த்துவிட்டு எல்லவித பிரணாயாம யோகப்பயிற்சிகளையும் நிறுத்த சொல்லிவிட்டு மூலிகை தைலம் கொடுத்து தேய்த்து முழுகிவர சொல்லி அனுப்பினார், அந்த சிகிச்சையின் பின் அவன் சாதரணமாகி சில வருடங்க்களின் பின் ஒரு நாள் பஸ்ஸில் பயணிக்கும் போது அவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, இந்த பிரச்சனையினால் அவன் எதிர்பார்த்தது போல் பொறியியல் செல்லமுடியாமல் போனாலும் , சிவில் இன்ஞினியரிங் டிப்ளோமா கற்றுவருவதாக கூறினான். இந்த விடயத்தினை இங்கு ஏன் கூறினோம் என்றால் இன்றையகாலத்தில் யோகம் என்பதும், பிரணாயாமம் என்பதும் வர்த்தகமயப்படுத்தப்பட்டு ஆழமான அறிவு இன்றி பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்வ மிகுதியில் முயற்சிகும் போது வரும் ஆபத்தினால் பின்னர் உயரிய ஒரு அறிவின் மீது வெறுப்பு வந்து விடுகிறது. யோகம், தியானம் என்று தொடங்க்கிய பலபேர் சிறிதுகாலத்தின் பின் எதுவித முன்னேற்றமும் பெறாமல் ஆர்வம் அற்றுப்போகின்றனர். இதற்கு காரணம் உரிய அளவில் கருதுகோள் அறிவினை பெற்றிராததுதான், ஒரு பயிற்சிக்கு முன்னர் அதுபற்றிய தொழில் நுட்ப அறிவினை முழுமையாக பெற்றிருத்தல் அவசியம், இது பௌதீக கல்வியிற்கு மட்டுமால்ல ஆன்மீக யோக கல்விக்கும் பொருந்தும்.

அடுத்தவிடயம் யோகம் பயிலவரும் போது பலர் பக்தி மனப்பாங்க்கில் வந்து குருதேவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என ஒழுங்க்கு முறையில்லாமம் தமது மனம் போன போக்கில் செய்து இறுதியில் துன்பப்படுபவர்களும் உண்டு.

ஆக இந்த பாடலில் குருதேவர் பிராணவித்தையினை கற்க விரும்புபவனுக்கு துணையாக கீழ்வரும் கருத்துக்களை கூறியுள்ளார்;

மாணவன் முதலில் தனது உடலினால் எவ்வளவு அளவு மூச்சினை பூரிக்கமுடியும், கும்பிக்க முடியும், ரேசிக்க முடியும் என்பதனை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்.  அதன் பின் கும்பகத்தில் மூச்சு நிறுத்தப்பட்டாலும், பிராணனை எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்பதனை தன் நிலைக்கு ஏற்ப குருவிடம் கேட்டறிய வேண்டும், (மூச்சு வேறு, பிரானன் வேறு என்பது எமது வேறு சில பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது). மூச்சினை எப்படி பூரிக்க வேண்டும், கும்பிக்க வேண்டும், ரேசிக்க வேண்டும் என்பதனை கேட்டறிய வேண்டும். (இது யோக வித்தையில் பரிட்சையம் உள்ளவர்களுக்கு தெரியும் என என எண்ணுகிறோம்.) அதாவது எந்த மூக்கினால் இழுத்து, எந்த மூக்கினால் விடவேண்டும், கும்பகத்தின் போது நுரையீரல், உடலது அமைவு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக கேட்டறிய வேண்டும்.  பின்னர் குறித்த பயிற்சியினால் உடல் மனம் என்பவற்றில் ஏற்படும் மாற்றம் குணங்குறிகள் எவை என கேட்டறிய வேண்டும். இறுதியாக இவ்வளவற்றயும் சொல்லித்தந்த குருவிற்கு நண்றியுணர்வுடன் மதிப்பளிக்கவேண்டும்.

சாதனை: கும்பகபிரணாயாமம் கட்டாயம் குருமுகமாய் பயிலவேண்டிய ஒன்றாகும், குருவை அணுகி அதனை எப்படி கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்ற வழிமுறை இதில் கூறப்பட்டுள்ளதால் முதல் பாடலில் கூறிய குருசாதனையுடன் பண்புகளை வளர்த்து வாருங்கள், குருகிடைக்கும் போது அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நன்றி: சுமனன் – சித்த வித்யா விஞ்ஞானம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !