உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம்!

தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம்!

பழங்கால கட்டுமானம், கல் கருவறை, கருவறையில் மேற்கூரைக்கு மரங்கள் கொடுத்து, வித்தியாசமான கட்டட அமைப்பு மற்றும் கருவறை வெளிபிரகாரத்தில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், 800 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக இருக்கலாம். பாண்டிய மன்னர் போர் புரிந்து நாட்டை பிடித்து வந்தபோது, ஒரே இனத்தை சேர்ந்த படையணி தலைவர், வீரர்கள் சுவாமியை வழிபட கோவில் அமைத்திருக்கலாம் என்ற வரலாற்று செய்திகள் உள்ளன. மதுரை பகுதியில் இருந்து வந்த அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பெருமாளை வைத்து விட்டு, இங்கு ஓய்வு எடுத்ததாகவும், மறுநாள் கிளம்ப மறுத்த சுவாமி, அங்கேயே கோவில் அமைக்க உத்தரவிட்டதால், இக்கோவில் உருவானதாகவும், அதேபோல், எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தண்ணீரில் விளக்கு எரிந்தது என கோவில் அமைய பல காரணங்கள் உள்ளதால், இது, காரணப்பெருமாள் என அழைக்கப்படுகிறது. கருவறை கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. முன்மண்டபம், மகா மண்டபத்துடன், முன்புறம், பழைய ஓடு வேயும் முறையில் தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும், மதில் சுவர்கள் சிறிதாக அமைக்கப்பட்டு, தீபஸ்தம்பம் உள்ளது. கோவிலுக்குள் செல்ல மூன்று வழிகள் உள்ளன. மூன்றிலும், ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் கல் நடப்பட்டுள்ளது.

பெருமாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், சங்கு சக்கரம், முத்திரை காட்டும் விரல், அருளாசி கூறும் கையுடன் அருள்பாலித்து வருகிறார். ஒரே பீடத்தில், இருபுறமும் தாயார், மலர்களுடன் நின்ற கோலத்தில் உள்ளனர். வழக்கமாக புடைப்பு சிற்பம் அல்லது சிலைகளாக இருக்கும். இங்கு, பெருமாள், சிலை வடிவம் மற்றும் புடைப்பு சிற்ப வடிவம் என இரண்டும் கலந்து அமைக்கப்பட்டு, பழைய சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக, வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. கோவில் முன், வலதுபுறத்தில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கல்லில், சக்கரத்தாழ்வார் புடைப்பு சிற்பம் <உள்ளது. இடதுபுறத்தில், ஆஞ்சநேயர் கும்பிட்ட கோலத்திலும், எதிரே கருடாழ்வாரும் உள்ளனர். இடதுபுறம், பிரகாரம் சுற்றி வரும்போது, புடைப்பு சிற்பமாக உள்ளதும், சிற்பக்கலை சிறப்பாகும். சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள், பெருமாள் கோவில் வைத்து வழிபட்டதும், அவர்களே வைணவ ஜீயரிடம் தீட்சை பெற்று, பல நூறு ஆண்டுகளாக, வைணவ முறைப்படி, பூஜை செய்து வருவதும் வித்தியாசமானதாகும். தல விருட்சமாக பல நூறு ஆண்டு பழமைவாய்ந்த வில்வ மரம் இருப்பதும் வித்தியாசமானதாக உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில், பல பகுதியில் வசிக்கும் மக்களும் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.இக்கோவில், பல்லடத்தில் இருந்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் ரோடு சந்திப்பு, போலீஸ் செக் போஸ்ட் அருகே, பனைபாளையத்தில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 99656 32346


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !