கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கடல் சங்மிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் 15 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருஷாபிஷேகம் பல்வேறு பூஜைகளுடன் நடைபெற்றது. காலையில் நடை திறந்ததும் கணபதிஹோமமும், நவகலச பூஜையும் நடைபெற்றது. பத்து மணிக்கு சோடாஷாபிஷேகம் என்ற 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஒன்பது வெள்ளிக்கலசங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு கலசபூஜை நடத்தப்பட்டு தேவிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மதியம் வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு உச்சபூஜை நடைபெற்றது. இரவு எட்டு மணிக்கு அம்மன் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.