உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவிலில் தூக்குத்தேர் விழா கோலாகலம்

செல்லாண்டியம்மன் கோவிலில் தூக்குத்தேர் விழா கோலாகலம்

மோகனூர்: ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் தூக்குத்தேர் திருவிழா, கோலாகலமாக, நேற்று நடந்தது. மோகனூர் அடுத்த ஒருவந்தூரில், பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், மாசி மாதம் தூக்குத்தேர் திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 13ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் தேர் முகூர்த்தம் செய்து, ஜோடனை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தேர் உள்ளூர் சுற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் கிடா வெட்டி, ஸ்வாமிக்கு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று (ஃபிப்., 20) காலை, 9 மணி முதல், ஒருவந்தூர்புதூர், கணபதிபாளையம், செல்லிபாளையம், தொட்டிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், வடுக்கப்பட்டி ஆகிய பகுதிகளில் கிடா வெட்டும், மாலை, 6 மணிக்கு, தேர் வடுக்கப்பட்டி எடுத்துச் சென்று, ஓடக்காரன் பூஜை, கிடா வெட்டும் நடக்கிறது. நாளை (ஃபிப்., 21) மாவிளக்கு பூஜையும், மாலை, 6 மணிக்கு, தேர் எடுத்துக்கட்டி சாவடிக்கு எடுத்து வந்து அலங்காரம் செய்து, உள்ளூர் சுற்றி வந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கிடாவெட்டும், சிறப்பு வாண வேடிக்கையும் நடக்கிறது. ஃபிப்ரவரி, 25ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !