வடமதுரை மாரியம்மன் மாசித்திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் திருப்பணியால், கடந்த சில ஆண்டுகளாக மாசித்திருவிழா நடைபெறவில்லை. திருப்பணி முடிந்து கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து, இந்தாண்டு மாசித்திருவிழா மார்ச் 1ம் தேதி பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வந்தார். மார்ச் 11 முதல் 15 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. நேர்த்திகடனுக்காக பூக்குழியில் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு 12.15 மணிக்கு, திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி மைதானத்தில் நடந்தது. இதில், காப்பு கட்டி பல நாட்களாக விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது.