மார்ச் 30ல்.. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வரும் 30ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 8ம் தேதி முடிய விழா தொடர்ந்து நடக்கிறது. விழாவின் ஒவ்வொருநாளும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அம்மன் வீதியுலா வருதல், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 7ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தேர்திருவிழா நடக்கிறது. சர்வ அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பங்குனி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நாளை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகள் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.