பார்வதீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா!
காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் சூரிய பூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. காரைக்காலில் முற்காலத்தில் திருதெளிச்சேரி என அழைக்கப்பட்ட கோவில்பத்து கிராமத்தில் சுயம்புவர தபஸ்வினி அம்பிகை உடனமர் பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சூரிய பகவான் பூஜித்த ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகும். கி.பி.ஆறாம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சூரிய பூஜை விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில், மாலை 5.30 மணிக்கு சூரியக் கதிர் கருவறையில் உள்ள மூலவர் பார்வதீஸ்வர் மீது விழுந்தது. அதையடுத்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய பூஜை விழா, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.