வடசென்னிமலையில் பங்குனி உற்சவம்!
ADDED :4516 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நாடார் வகையறா சார்பில் ஆத்தூர் அடுத்த வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் 4ம் ஆண்டு பங்குனி உற்சவத் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சி கோட்டைமேடு செல்வவினாயகர் கோவில் வள்ளி, தெய்வானை முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, கோமுகி நதிக்கரையில் இருந்து காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். கோட்டைமேடு கோவிலில் இருந்து இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை, முருகன் உற்சவர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆத்தூர் அடுத்த வடசென்னிமலை பால சுப்ரமணியர் கோவிலுக்கு சென்றனர். அங்கு நேற்று நடந்த பங்குனி உத்திர 4ம் நாள் திருவிழாவிற்கு அடிவாரத்தில் இருந்து அனைவரும் காவடி, தீர்த்தகுடம் எடுத்து மலையேறி சென்று வழிபட்டனர்.