கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை
ADDED :4378 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் சிவன் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கலசஸ்தாபனம் செய்து, வருணபூஜையும், ருத்ரத்ரிசிதி ஹோமங்களும் நடந்தன. பின், காலை 7:30 மணிக்கு மூலவர் சிவபெருமானுக்கும், நந்தியெம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட கலச நீர் ஊற்றப்பட்டது. அப்போது மழைவேண்டி பக்தர்களின் கூட்டுப்பாராயணம் நடந்தது. ஹோமங்களை அர்த்தநாரீச குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ரவிகுருக்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.