உடுமலையில் விசேஷமாக நடந்த பிரதோஷ வழிபாடு!
உடுமலை : உடுமலை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, மாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்துார் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷக பூஜைகள் நடந்தன; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.