உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
உடுமலை: உடுமலை பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, மாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ரத்தின லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் உள்ள சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்தூர் பிரிவில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களிலும், பிரதோஷம் முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.