சித்தலூர் அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
தியாகதுருகம் : சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவர் அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்து ஊஞ்சலில் வைத்து, பக்தி பாடல்கள் பாடி அம்மனை தாலாட்டினர். பக்தர்கள் கும்மியடித்து அம்மனை போற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மகர்த்தா கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன் பூசாரிகள் குமார், தமிழ்செல்வன், நாராயணன், ஜெயசங்கர், சிலம்பரசன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.