ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாணம்!
ADDED :4224 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் விழா நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில், ஆடித்திருக்கல்யாண விழா, ஜூலை 21 ல், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில், பர்வதவர்த்தினி அம்மன் தினமும் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சிநடந்தது. 11ம் நாளான நேற்று, திருக்கல்யாண திருவிழாவை யொட்டி, மூன்றாம் பிரகாரத்தில், மலர் அலங்கார மேடையில் ராமநாத சுவாமி, அம்மன் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க, இரவு 8:05 மணிக்கு கோயில் குருக்கள் விஜய் ஆனந்த், சுவாமி சார்பில் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின்னர் நடந்த மகா தீபாராதனையில், கோயில் இணை கமிஷன் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு,மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.