வேளாங்கண்ணி தேவாலய திருவிழா நிறைவடைந்தது!
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. நாகை அடுத்த வேளாங்கண்ணி, பிரசித்திப் பெற்ற ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா,ஆக., 29 ம்தேதி துவங்கி,செப்., 8 ம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா ஆகஸ்ட் 29 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பெரிய சப்பர பவனி நடந்தது. மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு,தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு பேராலய முகப்பில் ஏற்றப்பட்டிருந்த மாதாவின் உருவம் பதித்த கொடி இறக்கப்பட்டது.தொடர்ந்து பேராலய கீழ் கோவிலில் மாதா மன்றாட்டு,நற்கருணை ஆசீர்,தமிழில் திருப்பலி நடந்தது. நேற்று நடைபெற்ற நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.